Showing posts with label நனவோடை. Show all posts
Showing posts with label நனவோடை. Show all posts

May 2, 2006

வாழத்தானே வாழ்க்கை....

ஊர் சுத்துறது, விளையாடுறது, கதை பேசுறதுன்னு எல்லா வேலையும் முடிச்சிட்டு ஒரு குளியலையும் போட்டுட்டு மணி எட்டே முக்கால் ஆச்சா, ஆச்சான்னு (இது தேவதைகளோட நேரம்!!!) கடிகாரத்தோட கொஞ்ச நேரம் சண்டை போட்டுட்டு மெஸ்ஸுக்கு போறதுக்காக ரூமை விட்டு வெளிய வரும்போது, போன் வரும். என்ன ஜெண்டில்மேன் (என்னையும் ஜென்டில்மேன் ஆக்குனதுக்கு நன்றி ஜென்டில்மேன்) என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க. சாப்பாடு ஆச்சா..

கேக்குறவருக்கு புயல் பூகம்பம் வந்தாலும் எட்டே முக்காலுக்கு மேல தான் இவனுக (இதுலயும் கோஷ்டி) சாப்ட போவானுங்கன்னு தெரியும். தெரிஞ்சிக்கிட்டே நக்கலா சிரிச்சிக்கிட்டே (அந்த சிரிப்பு) கேப்பாரு. இந்த கேள்வியோட அர்த்தம் எங்க சாப்ட போகலாம். எங்க சாப்ட போகலாம்ன்றத விட இப்ப பரோட்டா பிளாசா போலாமன்றது தான் இதுக்கு அர்த்தம் (முடிவு பண்ணிட்டு கேக்குற ஆட்களை...). ஓட்டை யமாகாவை (Oh.. my love!!) கெளப்பிகிட்டு அவரு இடத்துப்பக்கமா போனம்னா, யா!!!! ன்னுட்டு வருவாரு. அப்டியே நியூ பெல் ரோட்ல இறங்கி வண்டியோட இஞ்சினை முழு ஸ்பீடுல சுத்த விடுறதுக்குள்ள(பின்னாடி இருக்கறவர் அலர்றது வண்டியோட சத்தத்தில அவருக்கே கேக்காது) ராமையா காலேஜ் வந்திரும். அப்புறம் சந்து பொந்துன்னு புகுந்து சஞ்சய் நகரை பிடிச்சா அங்க இருக்கற ஒரு ரோட்டுக் கடையோட பேரு தான் பரோட்டா பிளாசா. கடை தான் ரோட்டுக் கடையே தவிர பரோட்டா( நார்த் இந்தியன்- பஞ்சாபி) நல்லாருக்கும். தொட்டுக்கறதுக்கு தயிர் மட்டும் தான். ஆனா சூப்பரா இருக்கும். ருசியோட சேத்து விலையும் அதிகம் தான். ஒரு ஆறு மாசம் வாரத்துக்கு ரெண்டு மூணு நாளுன்னு நினைச்சப்பல்லாம் போய் இந்த மாதிரி தின்னுக்கிட்டு இருந்தோம். இது போக வாரத்தில (கோட்டா) ஒரு நாள் வாழ்க்கை வாழ்வதற்கேன்னு MG ரோடு, சபீனா பிளாசான்னு பொறுக்க முடிஞ்சது. அந்த நண்பர் டாட்டா காமிச்சிட்டு போனதுக்கப்புறம்.....

அடுத்து இன்னொரு குரூப் சேந்துச்சி. சந்தோசத்தை கொண்டாடுறதை பாத்திருப்பீங்க, சோகத்தை சந்தோசமா கொண்டாடுனதை பாத்திருக்கீங்களா. இந்த குரூப் எல்லாம்(தறுதலைங்க) இந்த வகை. வாழ்க்கையோட ஒவ்வொரு நிகழ்வும் ஒரு கொண்டாட்டம்னு, ஒவ்வொரு நாளும் கொண்டாடுறதுக்கு ஏதோ ஒரு காரணம் இருந்திச்சி. காரணம் எதுவும் கிடைக்கலன்னா அதே ஒரு காரணமா சொல்லிக்கிட்டு அதுக்கும் ஒரு பார்ட்டி. சுத்தி இருக்கறவனுங்க சாபமா விட்டாலும் யாரும் திருந்தக் கிடையாது.

டீக்கடையில உக்காந்துக்கிட்டு, டீக்குடிக்க பிடிக்கலை எனக்கு ஐஸ்கிரீம் தான் வேணும்னு யாராவது நின்னா எதுவும் சொல்ல முடியாது. நேரா ஐஸ்கிரீம் பார்லர் தான். நாங்க இருந்த இடத்தில இருந்து ரெண்டு கிமீ ல மல்லேஸ்வரம் சர்க்கிள்ல புதுசா ஓவன்ஸ் னு ஒன்னு திறந்திருந்தாங்க. ஒரு ஐஸ்கிரீமுக்கு மூணு அல்லது நாலு ஸ்கூப் போட்டு டிரெஸ்ஸிங் பண்ணி தருவாங்க. நல்லா இருக்கும். குரூப்ல இருந்ததெல்லாம் அந்த மாதிரி ஐஸ்கிரீம் ரெண்டு சாப்டுட்டு இன்னொன்னு ஆர்டர் பண்ணலாமான்னு கேக்கிற ஆட்கள். அதனால, போரடிக்கறப்பெல்லாம் போய் பாத்துட்டு வர்ற எடமா ஓவன்ஸ் மாறி போச்சி. ஒரு வாரம் அந்த பக்கம் போகலைன்னா ஏதோ கொலைக்குத்தம் பண்ண மாதிரி பேச ஆரம்பிச்சிருவாங்க.

இது ஒரு வகைன்னா,உப்பும் இல்லாம உறைப்பும் இல்லாம மெஸ்ல சாப்டு சாப்டு நாக்கு மரத்துப் போச்சின்னு ஏதாவது காரணத்தை கண்டு பிடிச்சிட்டு, பரோட்டா சாப்டுறதுக்காக அப்பப்ப மல்லு(VK) மெஸ்ஸை(யஷ்வந்த்புரா ரெயில்வே ஸ்டேசன் எதிர்க்க) தனியாவோ இல்லை கூட்டமாவோ எட்டிப் பாக்குறது உண்டு. அப்புறம் சோப்பு வாங்கணும், ஷாம்பு வாங்கணுன்னு ஒரு காரணத்தை கண்டு பிடிச்சிக்கிட்டு பத்து ரூவா சோப்பு வாங்க நாலு பேரு போயி வந்தது வந்துட்டோம்னு அப்டியே கோபிகா பக்கமா போய், பட்டன் இட்லியும் மசால் இட்லியும் கட்டி முடிச்சுட்டு என்ன இருந்தாலும் மெஸ் மாதிரி வராதுன்னு கதை பேசிக்கிட்டே ரெண்டு கிமீ நடந்துகிட்டே வர்ற வழியில இருக்கறதெல்லாம் பொறுக்கி தின்னுக்கிட்டே வந்ததும் உண்டு. இதெல்லாம் ரெகுலரா நடக்கும். இதுல அப்பப்ப யாருக்காவது சாமி வந்திருச்சின்னா அப்ப நடக்கிறது தான் கூத்தே!!!

அந்த வகையில....
ஒரு சாயங்காலம் ஒருத்தன் வந்து எனக்கு வெளிய போய் குல்கந்து சாப்டணும்னு வந்து நிக்கிறான். கையில இருந்தது சில சின்ன காந்திகளும் சில காசுகளும் தான். சரி வா போகலாம்னு போனா அங்க போய்ட்டு வெறும் குல்கந்து டேஸ்டா இருக்காது, அதோட ஐஸ்கிரீமும் டிரை ஃப்ரூட்சும் போட்டு சாப்டாதான் நல்லா இருக்கும்ற வக்கணை வேற. அப்புறம் பாக்கெட்ல இருந்த எல்லா சில்லறையையும் கூட்டிப் பாத்து ஒரெ ஒரு கால் ரூவாய மட்டும் மீதி வைச்சிட்டு மீதி எல்லாத்தையும் கல்லாவுல கொட்டுனோம். கடைக்காரன் ஏற இறங்கப் பாத்துட்டு குல்கந்து ரெடி பண்ணி குடுத்தான். நல்ல வேலை அன்னைக்கு வேற யாரும் என்னைய விட்டுட்டுப் போய்ட்டு வந்துட்டாங்கன்னு எப்பயும் குடுக்கற இம்சைய குடுக்கலை. சாதரணமா யாரையாவது விட்டுட்டு போனது தெரிஞ்சி போச்சின்னா அதுக்காக மறுபடியும் போயாகணும். ஒரு சமாதானமும் எடுபடாது.

அப்புறம் நிறைய ஸ்பெசல் காரணங்கள் கண்டு பிடிச்சதுக்கப்புறம் எல்லை விரிவடைஞ்சி சுத்தி இருக்கற இடங்கள்ல எல்லாம் போய் கொட்டித்தீர்த்தோம்.

சந்தோசமா சுத்திகிட்டு இருந்தப்ப ஒருநா மக்க பொட்டியக் கட்டி போய்த்தொலைன்னு நாடு கடத்தி விட்டுட்டாங்க. வந்த புதுசுல ஒன்னும் புரியாம யாரும் தெரியாம ஒரு மாதிரியா தான் இருந்தது. இப்ப இங்கயும் அதே மாதிரி ஒரு கும்பல்.

பனி சூப்பரா இருக்கு ஸ்கீயிங் போகலாம்.

வாழ்க்கை ரொம்ப டிரையா இருக்கு Bowling போகலாம்.

நாம இருக்கற எடம் tidal wavesக்கு பேமஸ். பக்கத்தில இருக்கற ஓடையிலயும் tidals இருக்கும். வா போய் பாக்கலாம்.

ஸ்பிரிங் ஆரம்பிச்சிருச்சி எங்கயாவது வெளிய போகலாம்.
ஒரு Barbeque மாதிரின்னா நல்லா இருக்கும்

சைக்கிள் இருந்தா இந்த நேரத்தில ஊர் சுத்துறதுக்கு நல்லா இருக்கும். இந்த வாரம் சைக்கிள் ஏலம் நடக்குது நீயும் வர்றியா....

இந்த பதிவை சைக்கிள் ஏலத்தில சைக்கிள் வாங்குனதுல ஆரம்பிச்சி barbeque ல போய் தின்னுட்டு நடக்க முடியாம நடந்து வந்ததில முடிக்கணும்னு நினைச்சேன். எங்கங்கயோ போயிருச்சி...

Mar 30, 2006

சரி என்ன பண்ணலாம்!!!!!

பத்மா தன்னோட பதிவுல அவங்க என்ன என்ன மாதிரி உதவிகள் சமூகத்துக்காக பண்றாங்கன்னு எழுதியிருந்தாங்க. அது நிச்சயமா அவங்களை விளம்பரப் படுத்திக்கறதுக்காக இல்லை. ஏதாவது பண்ணனும்னு நினைக்கிற ஒரு சிலருக்கு ஒரு தூண்டுதலா அமையலாமேன்ற ஒரு சின்ன ஆசையில தான்.

அந்த வகையில இந்த பதிவு. என்னோட நண்பன் ஒருத்தன் தன்னோட ஒரு அனுபவத்தைப் பத்தி மெயில் அனுப்பியிருந்தான். அந்த மெயில் சில வரிகளேன்னாலும் தன்னோட உணர்ச்சிகளை கொட்டி எழுதப்பட்டது. இதை எப்டி சொல்றேன்னா, இந்த வேலையை ஆரம்பிக்கும்போது/பண்ணிக்கிட்டு இருக்கும் போது ஒரு பார்வையாளனா(உதவி பண்ணலைன்னாலும் உபத்திரவம் பண்ணாம) கதை கேட்டுக்கிட்டு இருந்திருக்கேன். இதோட ஆரம்பம் ரொம்ப சுவராஸ்யமானது. நடந்து சுமாரா ரெண்டரை வருசம் ஆகிருச்சி. அந்த கிறிஸ்துமஸ்க்கு வீட்டுக்கு போயிட்டு நிறைய திங்கிறதுக்கு கொண்டு வந்திருந்தான். புது வருசம் முடிஞ்ச மறுநாள் சாயங்காலம் ஒரு நாலு பேரு(அவன்-அபிலாஷ், பாலாஜி-பாரி, குருவெங்கட், ஙன்னு முனியாண்டி) ஒக்காந்து ஊர்க் கதை பேசிக்கிட்டு இருந்தோம். வீட்டுக்கு போயிருந்தப்ப அவன், பக்கத்தில இருக்கற ஒரு மனநலம் குன்றியோருக்கான ஒரு விடுதிக்கு போய் தன்னோட கிறிஸ்துமஸ் கொண்டாடிருந்திருக்கான். அங்க அந்த குழந்தைகள் இவனை எதிர் கொண்ட விதத்தையும், அவங்க மத்தவங்களோட அரவணைப்புக்கு ஏங்குறதையும் சொல்லிட்டிருந்தான். இந்த கதையெல்லாம் சொல்லி முடிச்சிட்டு ஒரு கேள்வி கேட்டான். "நாம இந்த சமூகத்திட்டருந்து நிறைய எடுத்துக்கறோம்/எடுத்துக்கிட்டிருக்கோம், திருப்பி அந்த சமூகத்துக்கு என்ன பண்ணியிருக்கோம்". ஒரே ஒரு கேள்விதான், ரொம்ப சாதரணமான கேள்வி, நக்கலா ஒதுக்கிட்டு போகலாம்.

ஆனா அடுத்த எதிர் கேள்வி இந்த மாதிரி நக்கலாவோ இல்லை கேலி பண்ற மாதிரியோ இல்லை. ஏன்னா இருந்த மக்கள் எல்லாம் உணர்ச்சி குவியல்களோட உருவங்கள். எல்லாரும் கேக்குற மாதிரியே "சரி நாம என்ன பண்ணலாம்?". சாதாரணமா எல்லாரும் இதோட நிப்பாட்டிக்குவாங்க. ஆனா மக்க ஏதாவது பண்ணனும்ற ஒரு முடிவோட இருந்தாங்க. ஒவ்வொருத்தரும் மண்டைய ஒடைச்சி தெரிஞ்ச எல்லா வழியையும் எடுத்து கொட்டுனாங்க. ஒருவழியா பக்கத்தில இருக்கற எதாவது குழந்தைகளுக்கான அல்லது முதியோர்களுக்கான ஒரு விடுதிக்குப் போறது. இந்த மாதிரி சில இடங்களுக்கு போயிட்டு அதுக்கப்புறம் எதாவது முடிவு பண்ணலாம்னு முடிவு பண்ணுனாங்க. மறுபடியும் ஒரு கேள்வி வந்துச்சி. சரி எப்ப ஆரம்பிக்கலாம். முனியாண்டி கிட்ட இருந்து ஸ்டேண்டர்டான பதில் வந்துச்சி. அடுத்த வாரம் ஆரம்பிக்கலாம். சுத்தி இருந்தவங்கள்லாம் சுட்டெரிக்கறமாதிரி ஒரு பார்வையை விட்டுட்டு நாளைக்கி ஆரம்பிக்கறோம், அதுக்கு வழியை சொல்லுன்னு எதோ நான் செய்யாத தப்ப செஞ்சிட்ட மாதிரி பாத்தாங்க. நாங்க பேசிக்கிட்டு இருந்தது ஒரு சனிக்கிழமை. சாயங்காலம் ஆரம்பிச்ச இந்த பேச்சு ஒரு முடிவுக்கு வரும்போது மணி நைட்டு 8.00. யாருக்கும் எந்த எடமும் தெரியாது. அப்புறம் டெலிபோன் டைரக்டரிய எடுத்து வைச்சிக்கிட்டு ஆளாளுக்கு கிடைச்ச நம்பருக்கெல்லாம் போனைப் போட்டாங்க. அங்க சுத்தி இங்க சுத்தி India Literacy Project பெங்களூர் இன்சார்ஜ் சிந்து நாயக்கை(ஒரு அற்புதமான மனுஷி) பிடிச்சாங்க. அவங்க Parasparaன்ற ஒரு தொண்டு நிறுவனத்தைப் பத்தி சொல்லி அங்க எங்களை போகச் சொன்னாங்க. சரின்னு அவங்க கிட்ட Paraspara நம்பரை வாங்கி அதோட இன்சார்ஜைப் பிடிச்சாங்க. அவர் ILP (இது ஒரு funding agency மாதிரி) ரெக்கமண்டேஷன் அப்டின்றதால மறு நாளே எங்களை வரச் சொன்னாரு. அவங்க நிறைய விதயங்கள்ல கிளை பரப்பிருந்தாலும் எங்களை தெருவோர பெண் குழந்தைகளுக்காக நடத்துற ஒரு ஹாஸ்டலை பாக்க சொன்னாங்க. (இது பெங்களூருக்கு பக்கத்துல அவ்வளவா பஸ் வசதி இல்லாத ஒரு கிராமத்துல(Silvepura) இருக்கு).சொன்னது மட்டுமில்லாம அவங்களோட ஆட்டோவையும் ரெடி பண்ணி மறுநாள் அனுப்பறதா சொன்னாங்க.

நீயும் நாளைக்கு வர்றேன்னு ஒரு பார்வையே வீசிட்டு எல்லாம் சாப்ட போனாங்க. மறுநாளு ஞாபகமா எழுப்பி வேற விட்டாங்க. எந்திருச்சி போய் Nilgris ல நிறைய சாக்லேட் வாங்கிட்டு அவங்க அனுப்புன ஆட்டோல ஏறி ஒரு 15 கிமீ போனோம். எங்க எங்கயோ போன பயணங்களை விட இது ஒரு வித்தியாசமான அனுபவமா இருந்தது. அதைப் பத்தி தான் நண்பன் ILP அமெரிக்கா சேப்டருக்கு மெயில் அனுப்பியிருக்கான். அந்த மெயில் இங்க.


Dear Madam/Sir,

My name is Abhilash Vincent. I am a graduate student at Uni. of Cent. Florida. I am doing my PhD degree in Material Science and Engineering. I did my Masters at IISc. Bangalore. When I was in IISc, we happened to visit Paraspara, one of your rehabitaion centers. It was an amazing experience. My self and few of my friends went there and spend the whole day with the kids. The kids were very happy and they were enjoying our company. We realized that more than there physical needs they are looking for love an care, which they were missing a lot. They called us "Anna", and they asked us to lift them up, then sing with them, dance with them, play with them etc.... This made us to visit them most of the weekends. Later we could form a group of volunteers from IISc, who started going there. Since we were not getting enough money as scholarship to support them through donations, we decide to give them the mental support, care, education, motivation and some times small financial help too. We took them to the Visweswara museum bangalore. That was a great experience. We could see blinking eyes. Each of them were like Alice in wonderland. There were many different personalities. There was one kid always carrying her Maths note book. She was very good in Maths and she used to ask for Math problems. If she were brought up in a good environment I am sure she can become one of the geneous brains in our society. Many times Paraspara was a place we want to go and forget about or busy life and realize what we were and what we are supposed to do.

I am realy grateful to ILP and its founders who are doing a great job of bringing lights in life of thousands of kids who happened to be born unlucky in the darkest part of India

Regards,

Abhilash

அதுக்கு ILP ல இருந்து வந்த பதில்

Dear Abhilash,
It is wonderful to hear your experience and thank you so much for sharing with us. It is such experiences that make each of us at ILP realize humbly how much we had in terms of opportunity and choices. We strive to make it possible to have the same opportunities available to children from the deprived section - why should they not have the same things we did is a question we ask of ourselves often.

Many of us visit projects when we go back to our home town or villages, and come back very enriched by the experience.

Many of us are inspired to start chapters or form small groups to raise funds. We have recently initiated a scholarship program and are taking it to the next level - the main purpose is to ensure retention of the children in school and provide the children who are meritorious and have the interest and curiosity - like the girl you mention with her Maths book - an opportunity to pursue their dreams.

Thank you once again for sharing. And if I may request you, please can we use this or if you want to write more to publish in our newsletters - I'm sure many supporters will be inspired and will enjoy reading about your experience. I'm copying Nand Krishnan who coordinates Marketing programs and Newsletters on this.

Do visit any of our chapters if you happen to visit the area - DC, Pittsburgh (new one coming up at CMU), New York (new/starting at Univ of Columbia), Wesleyan Univ, Ohio, Portland, San Francisco Bay Area or Los Angeles (new). Hearing your experiences will further motivate and inspire our volunteers.

Cheers

Padmini Ranganathan
Convenor/President, India Literacy Project, USA

Mar 11, 2006

ஒரு ஜல்லியடிப்பு

இது உண்மையான ஜல்லியடிப்பு பத்தினது தான். யாரவது, வலைப்பூவுல அடிக்கடி அடிக்கற ஜல்லின்னு ஏமாந்தீங்கன்னா அதுக்கு நான் பொறுப்பில்லை.

வாரத்துக்கு ஒரு பதிவாவது போட்டுறணும்ற வரிசையில போன வாரம் ஒரு பெரிய பதிவா எழுதினேன். சுத்தி இருக்கற மக்க ஜல்லியடிச்சிருக்கேன்னு சொல்லிட்டாங்க. ரொம்ப கடுப்பானதனால இந்த வாரத்துக்கு என்ன எழுதுறதுன்னே தெரியலை. கடைசியில உண்மையிலேயே ஜல்லியடிப்பை அள்ளி விட்டுறலாம்னு முடிவு பண்ணிட்டேன்.


சரி இப்ப கதைக்கு. எனக்கும் ஜல்லிகளுக்கும் ரொம்ப பெரிய தொடர்பெல்லாம் கிடையாது. ஆனா ஒவ்வொரு இடத்திலயும் ஜல்லிகளை தவிர்க்க முடியாம ஏறி மிதிச்சி தான் கடந்து வந்துருக்கேன். சித்தாள் வேலை பாத்த வீடாகட்டும், நடந்து போன ரோடாகட்டும், விளையாடுன ஓடையாகட்டும் ஒரே ஜல்லி தான். ஓடையில கிடக்குறதை சரளைன்னு சொன்னாலும், நம்ம கதைக்கு அதை ஜல்லி கணக்குல சேத்துக்கலாம். ஜல்லியில அதோட சைஸை வைச்சி தான் குறிப்பிடுவாங்க. கால் இஞ்ச், அரை இஞ்ச், முக்கால், ஒன்னு, ஒண்னேகால் ஒன்னறை வரைக்கும் ஜல்லி கிடைக்கும். இதுக்கு மேல போறதெல்லாம் உடைசல்ன்னு சொல்லிருவாங்க. ரொம்ப பெருசா போயி சதுரமா அடிச்சிட்டாங்கன்னா அதை கல்லு கணக்குல சேத்துரலாம்.

இந்த ஜல்லி வகையில கால் இஞ்சும் அரை இஞ்சும் நம்ம வீடுகள்ல காங்க்ரீட் போடுறதுக்கு பயன்படுத்தறது. ஒன்னேகாலும், ஒன்னரையும் ரோடு போடுறதுக்கு பயன்படுத்தறது. நான் சொல்றது மெட்டல் ரோடுன்னு கிராமங்களுக்கு போயிக்கிட்டிருந்த ரோடுங்களை. (இதுவே தார் ரோடுன்னா, மெட்டல் போட்டுட்டு அதுக்கு மேல தாரோட சேத்து போடுறதுக்கு இந்த கால் இஞ்ச் ஜல்லி தேவைப்படும்). ஒவ்வொரு கிராமமும் உருப்படியான மெட்டல் ரோடாவது கிடைக்காதான்னு ஏங்கிட்டு இருந்த நேரமும் இருந்திச்சி. இன்னும் ஒரு சில இடங்கள்ல இப்பயும் மெட்டல் ரோடுதான் இருக்கு. இந்த ரோடுங்க போடுறதுக்காக சில நேரங்கள்ல ரோடு ஓரத்தில எல்லாம் இந்த ஜல்லியை கொட்டி வைச்சி சில மாசங்களுக்கு எதுவுமே பண்ண மாட்டாங்க. அது ஒரு பெரிய இம்சையா இருக்கும். அனேகமா எல்லாருக்குமே அதைப்பத்தின அனுபவம் இருக்கும்னு நினைக்கிறேன். ரொடு ஓரத்தில கொட்டி வைக்கிற ஜல்லி குவியலை 'தாக்கு' அப்டின்னு சொல்லுவாங்க. சாதாரண கிராமத்து ரோட்டுக்கு கிமீ க்கு இத்தனை தாக்குன்னு கணக்கு இருக்கு. இதுல ஆறு தாக்குக்கு ஒரு தாக்குதான் செம்மண் தாக்கு இருக்கணும். ஆனா காண்ட்ராக்டர் மக்க இங்க தான் விளையாடும். ஏன்னா ஜல்லி கொஞ்சம் விலை கூட. அதனால மண்ணைக் கொட்டி ரோட்டை போட்டுட்டு சந்தோசமா போயிரும். சனங்களும் ஆகா புது ரோடுன்னு சைக்கிளை குறுக்க மறுக்க ஓட்டி சந்தோசப் பட்டுக்கும். ஒரு ரெண்டு மாசங்கழிச்சி சின்னதா ஒரு மழை வந்துச்சின்னா அப்ப இளிக்க ஆரம்பிக்கும் அந்த ரோடு. அதுக்கப்புறம் தான் உலகத்தில இல்லாத இம்சை எல்லாம் ஆரம்பிக்கும்.

மெயின் ரோட்டுல இருக்கற கிராமங்களுக்கு பிரச்சனையில்லை. ரோடே இல்லாம போனாலும் பஸ்ஸு வந்துரும். மெயின் ரோட்டுல இருந்து பிரிஞ்சி போற கிளை ரோட்டுல ஒரு கிளை ரோடு, அதுவும் அந்த கிராமத்துக்குன்னு தனியா ரெண்டு கிமீ உள்ள போய்ட்டு வரணும்னா கொஞ்சம் யோசிச்சி பாருங்க. பாதி நாளு பஸ்சுக்காரன் எதாவது காரணம் சொல்லிட்டு நேரா போயிருவான். அப்புறம் பஸ்சு பிடிக்கனும்னா சில கிமீ நடக்கணும் இல்லை இன்னும் கூடுதலா சில கிமீ நடந்தா டவுனு. எல்லாருகிட்டயும் சைக்கிள் இருக்காதில்ல அதனால இருக்கற எல்லா வகையிலயும் ஊர்க்காரங்க டவுனுக்கு போவாங்க. நம்ம கிராமமும் இந்த வகை தான். மொத்தம் ஒரு 150 வீடு இருக்கும் சனத்தொகை 450-500ன்னு நினைக்கிறேன்.

எங்க ஊருக்கு வரணும்னா பஸ்சுக்காரன் ஒரு ரெண்டு(மொத்தம் நாலு கிமீ) கிமீ உள்ளே வரணும். ரோடு கொஞ்சம் மோசமாயிருச்சின்னா உள்ள வரமாட்டாங்க. கஷ்டம் தான். ஒரு தடவை ரோடு போட்டாச்சின்னா கவர்மெண்டு சில பல வருசங்களுக்கு அந்த பக்கமே திரும்பி பாக்காது. மழை பேஞ்சி ரொடு மோசமாயிருச்சின்னு அப்டியே விட்டுட்டா பஸ்சு வராது. என்ன பண்றது. கவர்மெண்டு மோசம், பஸ்சுக்காரன் மோசம், , மழையைக் கொண்டு வந்த கடவுளு மோசம், ரோடு போட்டவன் சுருட்டிட்டான் அப்டின்ற புலம்பல்கள் எல்லாம் இருக்கும். புலம்பிக்கிட்டே இருந்தா மட்டும் பஸ்சு ரோடும் திரும்பி வந்துறாதுன்னு மக்களுக்கு நல்லா தெரியும். ஒன்னு எலக்சன் வரணும் இல்லை கிராமத்துக்குன்னு சொந்த பஸ்சு இருக்கணும். 500 பேருல 50 பேரு கூட டவுனுக்கு போக மாட்டாங்க. அதனால சொந்த பஸ்சு கதையெல்லாம் புவ்வாவுக்காகது. எலக்சனும் அடிக்கடி வர்றதில்லயில்ல. ஒரு ரெண்டு வாரம் பாப்பாங்க. மூணாவது வாரம் என்ன பண்றதுன்னு யோசிக்க ஆரம்பிச்சிருவாங்க. அவன் குத்தம், இவன் குத்தம்னு அடுத்தவனை கையைக் காட்டிக்கிட்டிருந்தாலும், கதைக்காகுறது எதுன்னு ரொம்ப சுளுவா முடிவு பண்ணிருவாங்க. ரோடு போடுறதுக்கும் வசதி பத்தாது. அதனால ஒரே வழி ஜல்லியடிக்கறது தான். காங்க்ரீட் ஜல்லி எல்லாம் அடிக்க முடியாது. அதனால ஓடையில இருந்து, சரளையை கொட்டுறதுன்னு முடிவு பண்ணிருவாங்க. வீட்டுக்கு இவ்வளவு, கவர்மெண்டு சம்பளக்காரங்க இவ்வளவு, ஊரு இவ்வளவு, விருப்பப் படுறவங்க அதுக்கு மேலன்னு ஊர்ல ஒக்காந்து புரணி பேச்சோட இதையும் பேசி பெருசுங்க முடிவு பண்ணி இளவட்டங்களுக்கு தகவல் போகும். அப்புறம் எப்டியும் ஒரு ரெண்டு நாள்ல ஜல்லியடிக்கற திருவிழா நடக்கும். ஊர்ல பாதிப்பேரு அங்க தான் இருப்பாங்க. இதே மாதிரி
வருசத்துக்கு ரெண்டு மூணு ஜல்லியடிப்பு திருவிழா இருக்கும்.


இந்த மாதிரி தேவையான விசயங்களை எப்டியாவது சாதிச்சிக்கறதினால, எங்க ஊர்க்காரங்க அடுத்த ஊர்க்காரங்க கிட்ட விடற பந்தா சொல்லி மாளாது. நானும் அந்த ஊர்க்காரன் தான. இங்க நான் படம் போடலைன்னு வேற யாரு எங்க ஊருக்காக படம் போடுறது. அதனால ஒன்னு ரெண்டு (எல்லாம் பத்து வருசத்துக்கு முந்துன கணக்கு)

1. 150 வீட்டுக்கு, 55-60 தெரு விளக்கு. இது போக ஒவ்வொரு வீட்லயும் சாயங்காலம் அடுத்த வீட்ல போடுறதுக்கு முன்னாடி நம்ம வீட்ல போட்றணும்னு வைச்சிருக்கிற வெளி லைட்டு, அங்கங்க இருக்கற கோயில் லைட்டுன்னு ஊரே பளிச்சுன்னு இருக்கும். ஊரை விட்டு வெளிய நின்னு பாத்த என்னமோ டவுனுக்கு பக்கத்துல இருக்கற மாதிரி இருக்கும்.

2. ஊரைச்சுத்தி 100-200 மீட்டருக்கு ஒரு அடிகுழாயி. ஊரை விட்டு ஒரு ரெண்டு கிமீ தாண்டி காட்டுக்குள்ள ஒரு அடிகுழாயி(காட்டுக்கு போனா குடிக்கறதுக்கு வேணுமாம்)

3. பக்கத்து டவுனுல இருந்து பஸ் அப் அண்டு டவுன் 12 டிரிப்(பெரிய பெரிய கிராமங்கள் எல்லாம் ஒன்னு ரெண்டுக்கே அல்லாடிக்கிட்டு இருப்பாங்க). இதனால மக்க அலம்புன அலம்பு கொஞ்சம் நஞ்சமில்லை. டவுனுக்கு போயி டீக்குடிச்சிட்டு வரேன்னு, ஊர்ல இருந்து போற பஸ்சுல டவுனு ஆரம்பத்திலயே எறங்கி டீக்குடிச்சிட்டு அந்த பஸ் திரும்பி வரும்போது ஏறி வந்துர்றது. ஒரே காமெடி தான். அப்பப்ப பஸ்சுக்காரன் ஊருக்குள்ள வராம கட் அடிச்சா, பஸ்சைக் கட்டி போட்டுட்டு வரச்சொல்லு உன்னோட அதிகாரிய அப்டின்னு உதார் விட்டது எல்லாம் உண்டு.

4. பக்கத்து ஊர்க்காரங்க கையால அடிக்கற ஸ்பிரேயர்ல காட்டுல மருந்தடிச்சா இங்க மக்க, பவர் ஸ்பிரேயர்ல படம் போட்டுக்கிட்டு இருக்கும். அதனாலயே சுத்தி இருக்கற கிராமங்களுக்கெல்லாம் விவசாயத்தில முன்னொடியா இருக்க முடிஞ்சது.

5. அப்புறம் டீவி பொட்டி. பஞ்சாயத்து பொட்டி எப்ப படுத்தாலும் மிஞ்சி போச்சின்னா ரெண்டு வாரம் தான். இது போக வாரத்துக்கு ஒரு தடவை டீவி டெக்குன்னு விடிய விடிய படம் ஓடும். கலர் டீவின்னு ரூல் வந்தப்ப, ஆளுக்கு மொதலா போயி தூக்கிட்டு வந்துட்டாங்க.

6. இப்பயும் எங்க ஊரு பெருமையா பேமஸா சொல்லிக்கறது தண்ணித்தொட்டிய தான். மோட்டார் போட்டு ஓவர் டேங்க் கட்டி முதல்ல பொதுக்குழாய், பின்னாடி வீட்டுக்கு வீடு கனெக்சன், இப்ப இன்னொரு ஓவர்டேங்க்ன்னு பட்டைய கிளப்பிக்கிட்டிருக்காங்க. சுத்தி இருக்கற ஊருங்கள்ல ஆரம்பிச்ச ஆறு மாசத்தில ஊத்தி மூடுனப்ப, எனக்கு தெரிஞ்சி எங்க ஊருல 10-20 நாளைக்கு மேல நிப்பாட்டுனது கிடையாது.

7. ரொம்ப நாளா குறைன்னு இருந்த கக்கூசு பிரச்சனையையும் இப்ப சரி படுத்திட்டதா கேள்வி பட்டேன்(ஊரை விட்டு வந்து ஆச்சி அது ஒரு 10-12 வருசம்)

இந்த வகையில எங்க கிராமத்தில தன்முனைப்பா செஞ்ச விசயங்கள் நிறைய. எந்த விதமான தகவல்களோ இல்லை உதவியோ இல்லாதப்பயும் தேவையை முன்னிட்டு தங்களுக்கு தேவையானதை யாரோட உதவியையும் எதிர்பார்க்காம பண்ணிக்கிட்டு இருந்திருக்காங்க/இருக்காங்க. சும்மா சும்மா நொட்டனை மட்டுமே சொல்லிக்கிட்டு இருக்காம செயல்ல காட்டுறது அவ்வளவு சுலபமில்லை தான். ஆனா காட்ட முடிஞ்சிருக்கு. அந்த மாதிரி ஊர்ல இருந்து வந்ததனாலேயே, யாராவது, அவன் யோக்கியமா, இவன் யோக்கியமான்னு நொட்டனை மட்டுமே சொல்லிக்கிட்டு, இதெல்லாம் கவர்மெண்டு பண்ணனும் ரொம்ப ஈஸியா அடுத்தவங்களை நோக்கி கைய காமிச்சிட்டு நாம என்ன பண்ணியிருக்கோம், என்ன பண்ண முடியும்னு யோசிக்காம இருக்கறவங்களை பாத்தா கொஞ்சம் ஒதுங்கி போகத் தோணுது. சரி அதை விடுங்க.


இப்ப ஜல்லிக்கும் இந்த கதைக்கும் என்ன சம்பந்தம்.
ஒரு நாலஞ்சி பேரு ஊர்ல மண்டையா திரிஞ்சிக்கிட்டு இருந்தாங்க. டெலிபோன் ஆபிஸ்ல எங்கூருக்கு போனு குடுக்க முடியுமா முடியாதாங்குறது, பஸ் டிப்போவுல பஸ்சு கரெக்டா வரணும் வரலைன்னா நடக்கிறதே வேறன்னு சட்டம் பேசுறது, கரண்டாபீஸ்ல போயி எங்கூரு முன்னேறிருச்சி, முதல்ல அந்த ஓட்டை டிரான்ஸ்பார்மரை மாத்துன்னு சவுண்டு விடுறது, ரோட்டைச் சுத்தி காட்டுக் கருவேலை வளர்ந்து போச்சு, அவங்க அவங்க எடத்துல இருக்கறதை வெட்டிருங்க; நாங்க வெட்டுனா கட்டைய நாங்களே வித்துருவோம்னு பயமுறுத்தறதுன்னு அலம்பிக்கிட்டு திரிஞ்சாங்க. அந்த சமயத்தில ஊர்ல இருக்கற ரோடு காணாது, இன்னொரு ரோடு வேணும்னு சண்டை போட்டு புது ரோட்டுக்கு பெர்மிசன் வாங்கி வைச்சிருந்தாங்க. ரோடு போட ஆரம்பிச்சப்ப, காண்ட்ராக்டரை இம்சை பண்றதுக்காக இன்னொரு காண்ட்ராக்டரை தொந்தரவு பண்ணி தெரிஞ்சிக்கிட்ட விசயங்கள் தான் இந்த ஜல்லி விசயங்கள் எல்லாம். மேல சொல்லியிருக்கற விசயங்கள் எல்லாம் மண்டக்காரங்க சொன்ன ஞாபகத்தில இருந்து எழுதுனது. அதனால சரியா இருக்குமான்னு தெரியலை. அப்ப மண்டையா சுத்திக்கிட்டு இருந்ததில ஒருத்தரு இன்னைக்கு ஊர் பஞ்சாயத்து தலைவரு. இப்ப ஊரெல்லாம் சிமெண்டு ரோடு, கலையரங்கம், அங்கங்க கக்கூசு, ரெண்டாவது தண்ணித்தொட்டி, இன்னொரு புது ரோடுன்னு என்னன்ன பண்ண முடியுமோ பண்ணிக்கிட்டு இருக்காங்க.

Feb 7, 2006

முனியாண்டியும் சில மாடுகளும் - 2

இப்ப ரெண்டாவது.

கிராமத்தில இருக்கும் போது கிராமத்தோட ஒட்டாம, டவுனுல இருக்கும்போது கிராமத்தை நினைச்சிக்கிட்டே ஓட்டுன அமர்க்களமான வாழ்க்கை முனியாண்டியோடது. சில வருசங்கள், தாத்தா வீட்ல குப்ப கொட்டுனப்ப தான் முனியாண்டிக்கு மாடுங்களோட பரிச்சயம் ஆச்சி. கிராமத்தில தாத்தா வீட்ல மாடும் வண்டியும் இருந்தது. வீட்ல இருக்கறப்ப, கூளம் வெட்றதும், குழுதாடியில(மாடு தண்ணி குடிக்கிற தொட்டி) புண்ணாக்கு, தவுடு கலக்குறதும் முனியாண்டியோட டூட்டி. வீட்ல இருந்த ரெண்டு மாடும் ரொம்ப அமைதியான மாடுங்க. நாம உண்டு நம்மளோட புண்ணாக்கு உண்டுன்னு இருக்கும் (கிழட்டு மாடுகன்னு யாருங்க சவுண்டு விடுறது). தாத்தா மாடு வாங்குறதே ஒரு அலாதியான விசயம். ஊர்ல அவனவன் எளவட்ட மாடுக வாங்குறதுக்கு போட்டி போட்டுக்கிட்டு இருக்கிறப்ப இவரு மட்டும் ரொம்ப நிதானமான மாடா வாங்கிட்டு வருவாரு. ஒரு தடவை வாங்கிட்டு வந்த மாடு கொஞ்சம் தலையாட்டுதுன்னு (மத்தவங்களை முட்ட வர்றது) போய் வேற மாடு வாங்கிட்டு வந்துட்டாரு. அவருக்கு மாடுகளும் ஒன்னுதான் தன்னோட பிள்ளைகளும் ஒன்னு தான். சாட்டைக்கம்பு வச்சிருந்தாலும் அவரு மாட்டை அடிச்சி முனியாண்டி பாத்ததில்லை. மாடுகளும் இத தெரிஞ்சிகிட்டு வம்பு பண்ணதில்லை.

முனியாண்டி கைலி கட்ட (கிராமத்தில இது ஒரு முக்கியமான கிராஸ்ஓவர்) ஆரம்பிச்ச வயசில மாட்டு வண்டியும் ஓட்ட ஆரம்பிச்சிட்டான்(ஆனாலும் இது ரொம்ப நாளைக்கி நிலைக்கல). பருத்திக் காட்ல வேலையாளுக பருத்திய எடுத்து மூட்டை கட்டி வச்சிட்டு வந்துருவாங்க வீட்ல யாராவது ஒக்காந்து தூங்கிட்டு இருப்பாங்கன்ற எரிச்சல் தான்). ஒரு மூட்டை மட்டும் இருந்ததுன்னா சைக்கிள்ல போய் எடுத்துட்டு வரணும். அதிகமா இருந்ததுன்னா வண்டி கட்டிட்டு போகணும். முனியாண்டியோட முறை வர்றப்ப எவ்வளவு பருத்தி இருந்தாலும் வண்டி தான்.(அப்ப வண்டியோட்றதுக்கு ஆரம்பிச்ச ஆர்வம் இப்பவும் குறையலன்றது தனி). விளைச்சல் சமயத்தில மாட்டுக்கு பயிரு பச்சை நிறைய கிடைக்கும். அதனால படு ஊட்டமா இருக்கும். காட்டுக்கு போறப்ப ஊருக்கு வெளியில ஒரு பாதையோட ஆரம்பத்தை தொட்டுட்டம்னா போதும் அதுக்கப்புறம் அவங்களா போய் சேர வேண்டிய காட்டுக்கு கொண்டு போய் சேத்துருவாங்க. பாதைய பத்தி யோசிக்க வேண்டிய தேவையே இல்ல.(தாத்தா ஒருதடவை டவுனுக்கு போய்ட்டு நைட்டு திரும்ப வரும்போது எப்பயும் போல தூங்கிட்டே வந்திருக்காரு. இடையில வண்டி நின்னு போயிருக்கு. சரி வீடு வந்திருச்சின்னு எந்திருச்சி பாத்தா வண்டி நின்ன இடம் அந்த சைடுல இருக்கிற எங்க காடு).

காட்டுக்குப் போகும்போது வாக்கூடு (வாய்க்கூடு) கட்டி கூட்டிட்டுப் போனாலும் ஆடி அசைஞ்சு பக்கத்தில இருக்கிற செடிகளை பிடிச்சி இழுத்து தின்னு கிட்டே போவாங்க. ஆனா பருத்தி மூட்டைய ஏத்துன உடனே குஷியாகி( மொத்தமே 100 கிலோவுக்குள்ள தான் இருக்கும்) வீட்டை பாத்து ஓட ஆரம்பிச்சிருவாங்க. இழுத்து பிடிக்கிறது பெரிய விசயமாயிரும். இதுக ஓடுற ஓட்டத்தில மூட்டைங்க பறக்கிற கதையெல்லாம் தனி. என்ன தான் இதுக துடிப்பா ஓடுனாலும் முனியாண்டிக்கு இள மாடுங்களை பாக்கும் போதெல்லாம் தாத்தா மேல கொஞ்சம் கோவம் வரும். முனியாண்டி தன்னத்தானே சமாதானப் படுத்திக்கிறதும் ஒரு நேரம் வந்துச்சி.

கிராமத்தில "நாளேரு" ன்னு ஒரு விழா கொண்டாடுவாங்க. வருசத்தோட மொத விதைப்பை ஊர்க்காரங்கல்லாம் சேர்ந்து ஒரு நிலத்தில உழுது, விதைச்சு ஆரம்பிப்பாங்க. இதுக்கப்புறம் தான் மத்த நிலங்கள்ல விதைப்பு ஆரம்பிப்பாங்க. நாளேரன்னிக்கு அத்தனை மாடுகளும் மொத்தமா போயி அந்த நிலத்தை உழுகணும். இந்த மாடுகளை கூட்டிடுப் போறதே ஒரு விதமாயிரு்க்கும். அன்னைக்கு மாடெல்லாம் குளிச்சி மேக்கப் போட்டு அப்டி ஒயிலா ஊருக்குள்ள நடை போட்டு ஊர் கோயிலுக்கு போகும். அங்க பூசை போட்டு அப்புறமா தான் அனுப்பு வைப்பாங்க. மாடில்லாதவங்க செடி வெட்றது, கொத்துறது அப்டின்னு எதாவது ஒரு விவசாய கருவிய வச்சி அந்த நிலத்தில எதாவது செய்வாங்க. அதுக்கப்புறம் விதைக்க (விதையும் அவங்க அவங்க கொண்டு வருவாங்க) ஆரம்பிப்பாங்க. இப்டி முடிச்சிட்டு வர்றவங்களுக்கு மறுபடியும் கோயில்ல வரவேற்பு இருக்கும். (முறைப்பொண்ணுங்க மஞ்சத்தண்ணி ஊத்துறது இதுல ஒரு கிளைக்கத). அதனால யாரு மொதல்ல வர்றதுன்னு ஒரு போட்டி இருக்கும். எப்பவுமே இள மாடுங்க தான் முதல்ல ஓடி வரும். நம்ம மாடுக நிதானமானதுன்றதுனால மெதுவாதான் வரும். அதோட தாத்தாவுக்கு மாடுங்கள விரட்றதும் பிடிக்காது. (அதனாலயே மாடுங்களுக்கு பழக்கமில்லாதவங்களுக்கு குடுக்க மாட்டாரு. ஆனா முனியாண்டி தான் தவுடு புண்ணாக்கு காட்டிரான்ல, அதனால பெர்மிசன் உண்டு) பருத்திக் காட்டுக்கு போறப்ப இந்த ஓட்டம் ஓடுதுகளே, சரி இந்த தடவை ஓட்டிப் பாப்போம்னு அந்த வருசம் ரெடியா இருந்தான். போட்டி வந்து ஒரு நாளஞ்சி (ஜோடி) மாடுகளுக்கு தான். மொத்த நிலமும் உழுது முடியற வரைக்கும் ஏர்க்கால கழட்ட விட மாட்டாங்க. உழவு முடிஞ்சவுடனே எல்லாம் பிச்சி பறக்கறாங்க. முதல்ல ஆடி அசைஞ்சி ஆரம்பிச்ச நம்மவுங்க ரெண்டு மாடுக முன்னாடி ஓடுறத பாத்தவுடனே பாய்ச்சல் எடுக்க ஆரம்பிச்சிட்டாங்க. குறுகலான பாதைன்றதால சைடு வாங்கறது பிரச்சனை. அப்டி இருந்தும் மாடுங்க ஓடுன ஓட்டத்தில பின்னாடி பிடிச்சிக்கிட்டு ஓட முடியல. ஏதோ தூரம் கம்மின்றதால கொஞ்சம் தம் பிடிக்க முடிஞ்சது. கடைசில ரெண்டாவதா வந்து நின்னாங்க. அன்னைக்கெல்லாம் முனியாண்டிய பிடிக்க முடியலை (யாரும் அவன கண்டுக்கலைன்றது பெரிய விசயமா என்ன).

இப்டி பழச எல்லாம் நினைச்சு பாக்கும்போது, ஊரை விட்டு தள்ளி வந்து புலம்பல்களோட சுத்திக்கிட்டு இருக்கிறது முனியாண்டிக்கு கொஞ்சம் உறுத்தலா தான் இருக்கு. புவ்வாவுக்கு என்ன பண்றதுன்னு சமாதானம் சொல்லிக்கிட்டு பனி மூடுன சுத்துப்புரத்தை சன்னல் வழியா பாத்துகிட்டே இன்னும் வேற சில மாடுகளோட நினைவ அசை போட்டுக்கிட்டு இருக்கான்....

முனியாண்டியும் சில மாடுகளும் - 1

"ஒவ்வொருத்தரால் ஒவ்வொன்றையும், ஒவ்வொன்றால் ஒவ்வொருத்தரையும் ஞாபகம் வைத்துக் கொள்கிறோம்" --வண்ணதாசன்


ஊரை விட்டு தாண்டி வந்து, எல்லாத்தையும் கஷ்டப்பட்டு மறந்துட்டு ஒக்காந்து வேலையப் பாத்தாலும்(என்ன வேலைன்றது வேற விசயம்) , இமெயில்ல எதையாவது அனுப்பி மக்க மனுசன காலி பண்ணிடுறாங்க. இப்பிடித்தான் சமீபத்தில Amazing Madurai அப்டின்னு மதுரையோட முக்கியமான சில போட்டால்லாம் அனுப்பியிருந்தான் நண்பன். அதுல இருந்த ஒரு போட்டாதான் இங்க.(இதுல காப்பிரைட்டு வில்லங்கம் எதுவும் இருக்கான்னு தெரியலை).



இந்த படம் முனியாண்டிக்கு நிறைய விசயங்களை முன்னாடி கொண்டு வந்துடுச்சி. மாடு மாதிரி வளர்ந்திருக்க அதுக்கு இருக்கிற அறிவு கூட ஒனக்கு இல்ல; உன்னை வளர்த்ததுக்கு ஆடு மாடு வாங்கி வளத்திருக்கலாம்ன்னு வாங்குன திட்டை எல்லாம் மறந்தாலும், காளை மாடு, பசுமாடு, எருமை மாடு, அந்த மாடு, இந்த மாடுன்னு சில மாடுங்க முனியாண்டிய பீல் அடிக்க வச்சிருச்சி.

இதுல முனியாண்டியும் மாடும் சேர்ந்த மாதிரியான ரெண்டு விசயங்க மட்டும் இங்க. ஒன்னு முனியாண்டி சமீபத்தில படிச்ச மாடு பத்தின புத்தகம், இன்னொன்னு மாட்டு வண்டி டிரைவரா முனியாண்டி வேலை பாத்தது பத்தி.

முதல்ல புத்தகம்.
எந்த புத்தகம்னு பாதிப் பேருக்கு இன்னேரம் தெரிஞ்சிருக்கும். பெங்களூரை விட்டு மூட்டை கட்றதுக்கு முன்னாடி தேவைப் பட்டாலும் படும்னு புத்தகக் கண்காட்சியை மொத்தமா போயி ரவுண்டு கட்டி வாங்கினப்ப ( வாங்குனதுல ஒன்ன கூட எடுத்துட்டு வர முடியலைன்ற சோகத்தை யாரு கிட்ட போய் சொல்ல) நண்பன் ஒருத்தன் ஒரு 50-60 பக்கம் மட்டும் இருக்குற ஒரு சின்ன புத்தகத்தை வாங்கினான். முனியாண்டி அப்ப புத்தகம் படிக்கிறதில்லைன்ற முடிவோட இருந்தாலும் சின்ன புத்தகந்தான்னு ஆசைய காட்டி விட்டுட்டான். காலையில ஆரம்பிச்சு சாயங்காலம் வரைக்கும் நடக்குறத சொல்ற கதை. முதப்பக்கத்தில ஏற ஆரம்பிக்கற விறுவிறுப்பு கடைசி பக்கம் வரைக்கும் ஏறுமுகமாத்தான் இருந்தது. அந்த புத்தகத்தோட பேரு "வாடி வாசல்". இந்த புத்தகம் வந்து கிட்டத்தட்ட ஒரு 50 வருசம் இருக்கும். சி.சு. செல்லப்பா, தேனிப்பக்கம் நடக்கிற மாடு பிடிக்கிற விளையாட்டப் பத்தி எழுதுனது. மாடு பிடிக்கிறத அப்டியே கண்ணு முன்னாடி கொண்டு வந்து நிறுத்துது. இன்னும் சொல்லணும்னா கதையோட பாதியில நீங்களும் அந்த பொட்டல்ல காரிக்காளை, வாடிவாசல் தாண்டி வரப்போறதை ஆர்வத்தோட பாத்துக்கிட்டு நிப்பீங்க. அட்லீஸ்ட் முனியாண்டி அப்டி தான் நின்னான். ஒருவேளை நீங்க படிக்கும்போது மன்னிக்கனும் பாக்கும்போது சைடுல முனியாண்டிய பாக்க முடிஞ்சாலும் முடியலாம்.

Jan 28, 2006

எழுத்தாளர் முனியாண்டி......

சும்மா இருந்த முனியாண்டிய எழுத்தாளர் ஆக்கியே தீர்றதுன்னு ஒரு குரூப் கங்கணம் கட்டிக்கிட்டு சுத்திச்சு. இவங்க பண்ண இம்சையில முனியாண்டி கனவுல எல்லாம் தலயண, தலயணயா புத்தகம் எழுதிட்டு மாலையும்(யாரு போட்டதுன்னு கேக்காதீங்க), செருப்படியும் மாறி மாறி வாங்கிட்டு இருந்தான். அந்த இம்சையோட ஆரம்பம் இப்படித்தான் நடந்தது.


இந்த பொங்கல் இதழுக்கு ஏதாவது எழுதிக் கொடுத்தே ஆகனும் அப்டின்னு "தலை" (மன்ற தலைவர்) உத்தரவு போட்டுட்டாரு. அவருக்கு என்னாச்சுன்னு தெரியலை. சம்பந்தமில்லாம, சம்பந்தமில்லாத ஆளுக கிட்ட சம்பந்தமில்லாத வேலைய சொல்றாரு. நானும் பரவாயில்ல, இதென்ன பெரிய விசயம் ஒரு கை பாத்துறலாம்னு முடிவு பண்ணிட்டேன்.

ஆனா எழுதுறதுன்னா என்னன்னே தெரியாது. என்ன பண்றதுன்னு யோசிக்கவே தேவையில்லாம பெருமாள் ஞாபகத்துக்கு வந்தாரு. ஆனாலும் ஒரு சின்ன பயம். ஏன்னா குரூப்ல அவரை பாத்தாலே சின்னதா ஒரு பயம். அவரு சாதரணமா என்ன பண்ணுவாருன்றதுக்கு ஒரு சின்ன உதாரணம். ஒரு மூலையில நாய் தூங்கிட்டு இருந்துச்சுன்னா, ஆகா இந்த நாய்க்கு எவ்வளவு அருமையான முடி (இவர் இப்டி சொன்னதால தான் ஏரியால இருக்கற நாய்க்கெல்லாம் சொரி வந்து கேவலமா போயிடுச்ன்னு யாராவது நினைச்சா நான் பொறுப்பில்லை). கொஞ்சம் பிஸ்கட்டும் வொயினும் கலந்த மாதிரி நிறம். முடின்னா இப்டி இல்ல இருக்கனும். (மேற்படி பார்ட்டி சொட்டைன்றது வேற விசயம்) அதுக்கு வால் கூட இருக்கு(!) அப்டினு ஆரம்பிப்பாரு. அதுக்கு மேல என்ன பேசுவாருன்னு எனக்கு தெரியாது (அதுக்கு மேல அங்க நிக்க எனக்கு என்ன பைத்தியமா). எங்க எப்ப எதைப்பாத்தாலும் ஆகா! ஓகோன்னு ஆரம்பிச்சிருவாரு. இன்னும் சொல்லனும்னா டீக்கடையில சுடுதண்ணிய (அதாங்க தண்ணியில லைட்டா பால் பவுடர கலக்கி சூடு பண்ணிக் குடுப்பாங்கல்ல) குடிச்சுப்புட்டு ஆகா இந்த மாதிரி டேஸ்ட்டா இதுவரைக்கும் நான் குடிச்சதே இல்லே. வாழ்க்கையில நான் பொறந்ததோட அர்த்தத்தை இன்னைக்குத்தான் முழுமையா அனுபவிக்க முடிஞ்சிருக்கு அப்டின்னாரு. இப்டி பல வால்யூமுக்கு அவரோட அதிசயங்களை அடுக்கிக்கிட்டே போகலாம். என்ன பண்றது இப்டி ஒரு ஆளு கிடைக்க கொடுத்துல்ல வச்சிருக்கனும்.

சரி பிரச்சனைக்கு வருவோம். இந்த விசயத்துல அவரோட கருத்து எதுக்குன்னு தோணும். அதுக்கு ஒரு காரணம் இருக்கு. இப்ப கொஞ்ச நாளா, வலைப்பூ, கதை, கவிதை அப்டின்னு பினாத்தல் கொஞ்சம் அதிகம். அதனால என்ன சொல்றாருன்னு பாக்கலாம்ன்னு போய் அவர் முன்னாடி நின்னேன். நின்ன நேரம் ரொம்ப நல்ல நேரம். ஹை என்ட் பிசியில உக்காந்து cric—info கூட சண்டை போட்டுக்கிட்டு இருந்தாரு. இது சூப்பரான shot ஆ இருக்கும் போல. ஆனாலும் இவன் போன பாலை ஆடிருக்கணும் அப்டின்ற ரேஞ்சுல மானிட்டர் கூட பேசிக்கிட்டு இருந்தாரு. பதினோரு மடையனுங்க விளையாட, பதினோறாயிரம் மடையனுங்க அதை வேளை வெட்டி இல்லாம பாக்குறாங்கன்னு சொன்னவன், பதினோரு கோடி (ரொம்ப கம்மில்ல!) மடையனுங்க அதைப் பத்தி பேசியே சந்தோசப்படுறானுங்கன்னு சொல்ல மறந்துட்டான். அவனுக்கு என்ன பிரச்சனையோ. ஒரு வேளை அவனும் இந்த கும்பல்ல ஒருத்தனா இருக்கலாம்.

சரி இப்ப அதுவா பிரச்சனை. இந்த மேட்டரை இப்டி ஒருத்தன் சொல்லிஇருக்கான்னு நம்ம ஆளுகிட்ட சொன்னோம்னா சேலை கட்ன ஊர்ல(பாத்து ரொம்ப நாளாச்சி) வேட்டி கட்னவன் வெங்காயம்னு (இதுக்கு என்ன அர்த்தம்னு ஏங்கிட்ட கேக்காதீங்க), கிரிக்கெட் பத்தி தெரியாதவன மடையனாக்கிருவாரு. இப்டி எல்லாம் வாங்கிக்கட்டிக்காம கருமமே கண்ணாயிருன்னு, போன விசயத்தை சொன்னேன். என்னாச்சு ஏதாச்சுனு தெரியலை. சேர்ல உக்காந்து மானிட்டர் கூட பேசிக்கிட்டு இருந்தவரு அப்டியே ஜம்ப் பண்ணி கதவு மேல சாய்ஞ்சிக்கிட்டு (இடையில நான் எஸ்கேப் ஆயிரக் கூடாதில்ல) தரையில சவுரியமா உக்காந்தாரு. ஆளை அந்த போஸ்ல பாத்தா மைக் கிடைச்ச அரசியல்வாதி மாதிரி தெரிஞ்சாரு. செத்தேன் இன்னைக்கு எத்தனை மணி நேரமோ அப்டினு வாழ்க்கையை நொந்து போய்ட்டு மறுபடியும் விசயத்தை ஞாபகப் படுத்தினேன். இது இன்னொரு பெரிய பிரச்சனை இவருகிட்ட. ஏதாவது பேசும்போது திடீர்னு எதையோ சீரியசா நினைக்கிற மாதிரி நடிக்க ஆரம்பிச்சிருவாரு. இதுல விட்டத்தை வெறிக்கறது வேற. சரி தூங்குற மாதிரி நடிக்கறவனை எழுப்ப முடியாதுன்னுட்டு வேலையப் பாக்க போயிருவோம். இப்ப வேற வழியில்ல. மறுபடியும் அவரோட ஞான நிலையைக் கலைக்க வேண்டியதாயிருச்சி. உப்பைத்தின்னவன் தண்ணி குடிப்பான்னு சொல்றமாதிரி தவத்தை கலைச்ச பலனை கொஞ்ச நேரத்தில அனுபவிக்க வேண்டியதாயிருச்சி. அப்டியே நம்ம சாமியார்கள்லாம் ஆரம்பிகிறமாதிரி மெதுவா மெஸ்மரைசிங் வாய்ஸ்ல ஆரம்பிச்சாரு. அவரு இந்த லெவல்ல சப்ஜெக்டு பேசுனாருன்னா எதுவுமே புரியாது. சரி நமக்குத் தான் தலையில மேட்டர் எதுவும் இல்லையே அப்புறம் எப்டி புரியும்னு டீல்ல விட்டுருவேன். ஆனா இன்னைக்கு இலக்கியம் அது இதுன்னு ஆரம்பிச்சாரு. கொத்து மேல கொத்தா விழுந்துச்சி. ஆனா ஒன்னே ஒன்னு மட்டும் புரிஞ்சுச்சு. மேற்படி பார்ட்டி கிட்ட எந்த காரணம் கொண்டும் தலையை நீட்டக் கூடாதுன்னு. நல்ல வேளை அடுத்த ரூம்ல இருந்து எதோ வேணும்னு ஒருத்தன் வந்தான். பொழச்சம்டா சாமினு அவன மாட்டிவிட்டுட்டு எஸ்கேப் ஆயிட்டேன். அது அவனோட விதி.

சரி அய்யனாரைப் போய் பார்க்கலாம்னு நினச்சேன். ஏன்னா அவருதான் இந்த இதழுக்கு ஆசிரியர் வேற. போனா எதோ தேறும்னு தோணுச்சி. ஆனாலும் மனசு (அது எங்கன்னு தான் தெரியல,யாராவது இல்லாதவங்க சுட்டுருப்பாங்களாக்கும். நான் பாவங்க திருப்பிக் கொடுத்துருன்ங்க) கேக்கலை. மனசை எலும்பாக்கிட்டு நாமளா ஏதாவது செய்யலாம்னு உக்காந்தேன்.

இந்த இடத்தில இன்னொரு விசயத்தையும் சொல்லனும். இந்த பொங்கலுக்கு தெரிஞ்சவுங்களுக்கு ஒரு வாழ்த்து அனுப்புனேன்.(எங்க நமக்கு ரொம்ப(!)பிடிச்சவங்களுக்கு அனுப்புனா செருப்படி தான் கிடைக்கும் போல)அந்த வாழ்த்தோட சுருக்கத்த சொல்லிட்டு சொன்னாத்தான் புரியும். அதாவது, எல்லாருக்குக் பொங்கல் வாழ்த்து. இந்த நாள்ல நமக்கு படியளக்கிற விவசாயிங்களுக்கு(என்ன இருந்தாலும் ஒரே இனமாச்சே விட்டுக் குடுக்க மனசு வருமா) நன்றிய சொல்லிருவோம். அவங்க நல்லா இருக்கணும்னு பிரார்த்தனை பண்ணிக்குவோம். அப்டின்னு இங்கிலிபிஸ்ல அடிச்சு அனுப்பினேன்.இதை ஒருத்தரு மொழி மாத்தி தன்னோட வலைப்பூவுல எனக்கு first authorship குடுத்து ஏத்திட்டாரு. (என்னோட வாழ்த்தும் எப்டியோ இன்டெர்னெட் ஏறிடுச்சி அப்டியே போய் சேர வேண்டியவகளுக்கும் போய் சேந்தா சந்தோசம் தான்). இதெல்லாம் பெரிய விசயமில்லை. இந்த வாழ்த்துக்கு ஒருத்தன் பதில் எழுதுறான், நீ என்ன அரசியல்வாதியகப்போரீயா அப்டின்னு. (எனக்கே கொஞ்சம் பயமாப் போச்சு எங்க பக்கத்தில இருக்கறவங்க வாடை நம்மளையும் தாக்கிருச்சோன்னு). இப்ப சொல்ல வர்றது என்னன்னா இந்த மாதிரிபிரச்சனை மறுபடியும் வந்துரக்கூடாதுன்றதுதான்.

எழுதுறதுன்னு முடிவாயிருச்சு. என்ன எழுதுறது. கதையா, கவிதையா, கட்டுரையா, நாடகமா. இது ஒரு குழப்பம். கவிதை எழுதலாம்னா, காதலிச்சவனுக்குதான் கவிதை வரும்னு தினத்தந்திக்காரங்க சொல்றாங்க. அதுக்கு எனக்கு இனிமேல கொடுப்பினை இருக்கான்னு மாரியம்மா, காளியம்மாகிட்ட யாராவது கேட்டு சொல்லுங்க.(இதுக்குப் போய் மாரியம்மா, காளியம்மாவா போய் புடிச்ச பொன்னுகிட்ட போய் கேளுன்னு சொல்றது கேட்குது). அதோட கவிதையில சொல்ல வர்றதை தெளிவா, அழகா சொல்லனுமாம். என்னைக்கு ராயல் குரூப்ல (இது பைசா குடுத்து வாங்குன பட்டம் கிடையாது. குரூப் மக்களோட இம்சை தாங்காம நாங்களா ஏத்துக்கிட்ட பட்டம்) சேர்ந்தேனோ அன்னையிலேர்ந்தெ ரொம்ப(?) தெளிவா பேச ஆரம்பிச்சுட்டேன். அதனால கவிதை நமக்கு சரிப்பட்டு வராது.

சரி கதை எழுதலாம்ல. எழுதலாந்தான். ஆனா மாமரங்களும் தென்னை மரங்களும் தங்கள் கிளைகளை காற்றில் காய விட்டுக் கொண்ட்டிருந்தனனு வெண்ணை போடுறது சுட்டுப் போட்டாலும் வராது. நல்லா தெரிஞ்சவுங்க எதிரே வந்தாலே இவுங்ககிட்ட என்ன பேசுறதுன்னு எப்டியோ எஸ்கேப் ஆகுற ஆளு நானு. யாரையாவது பாத்து பேசுறதுன்னா....(வேப்பங்காய் பரவாயில்லைன்னு தோணும்). அப்ப கொஞ்சம் தெரிஞ்ச ஆளுங்களைப் பத்தி யோசிச்சுப் பாருங்க. இப்டி மிஸ் பண்ணுன, பண்ணிக்கிட்டிருகிற ஆளுங்க (அதுவும் பொண்னுங்க) எண்ணிக்கை கொஞ்சம் அதிகம் தான்.எல்லாம் லட்சுமி(B.Sc கிளாஸ்மேட்) கொடுத்த சாபம் தான். B.Scல யார்ட்டயும் சரியா மூஞ்சி கொடுத்து பேசலன்னு(பொண்ணுங்ககிட்ட) உன்னோட திமிர்த்தனத்துக்கு(அவங்க புரிஞ்சுக்கிட்டது அவ்வளவு தான்) பின்னாடி அனுபவிப்ப. நீ நெனைக்கிறப்ப தலைகீழா நின்னாலும் யாரும் ஒங்கிட்ட பேசமாட்டாங்கன்னு காலேஜ் கடைசி நாள்ல சாபம் கொடுத்துட்டா. ஆகா, நாம ரொம்ப மதிக்கிற பொண்னு இப்டி சாபம் கொடுத்துட்டாளேன்னு அப்புறமா மூணு வருச கதையெ மூணு மணி நேரத்தில ( இப்பவும் என்னால நம்ப முடியாத என்னோட ரிகார்டு) பேசி முடிச்சு சாப விமோசனம் வாங்க வேண்டியதாயிருச்சி. ஆனாலும் முழு மனசோட கொடுக்கலை போல இருக்கு. இன்னும் அனுபவிக்க வேண்டியதிருக்கு. ஆகக் கடைசியில சொல்ல வர்றது என்னன்னா வெண்ணை போடுறதுக்கு வழியில்லாததால கதை எழுதுறதுக்கு நோ சான்ஸ்.

அதனால என்ன கட்டுரை எழுதல்லாம்ல. ரொம்பப் பிடிச்ச விசயந்தான். பஸ் வராத மீனாட்சிபுரத்துல (அதாங்க நம்ம ஊரு) பக்கத்து வீட்டு தனுக்கோடித் தாத்தா வாங்குன தினகரன், தராசு, நக்கீரன் இது வழியா உலகத்தைப் பாக்க ஆரம்பிச்சவன் நானு. அதனால கட்டுரை எழுதுறது கொஞ்சம் ஈசியாத் தான் தோணுது. ஒரே பிரச்சனை என்னன்னா, பொங்கல் வாழ்த்துக்கே அரசியல் வாதியாகப்போறியான்னு கேக்குறவனுங்க நட்பு வட்டத்தில இருக்கும்போது உணர்ச்சி வேகத்தில எதாவது எழுதித் தொலைச்சா, எதாவது கட்சிக் கார்டைக் கையில கொடுத்துருவாங்களோன்னு ஒரு சின்ன பயம்.

ஒன்னும் புடிபடலை. இன்னும் கொஞ்ச நேரம் இப்டியே உக்காந்திருந்தா மூளை(இருக்கா என்ன) காய்ஞ்சி போய்ரும் போல இருந்தது. சரி போய் சுடு தண்ணி( தேத்தண்ணி, கோப்பித்தண்ணி உடலுக்கு நல்லது இல்லையாமே) குடிச்சா சரியாப்போயிரும்னு டீக்கடை பக்கம் ஒதுங்க வேண்டியதாயிருச்சி. அய்யனாரு அங்க இருந்தாரு. கொண்ட கொள்கையில சரியான பிடிப்பு இல்லாததினால (ராம்கோ சிமெண்ட் உபயோகப்படுத்தியிருக்கனும்) போய் விசயத்தை சொன்னேன். அவரு ஏற எறங்க பாத்துட்டு, ஆமா நீங்க எந்த இதழுக்கு எழுதறீங்க அப்டின்னு ஒரு குண்டை எறிஞ்சாரு. பொங்கல் இதழுக்குத்தான்னு பாதி முழுங்கிட்டே சொன்னேன். அவரு ஒரு நக்கல் பார்வையை விட்டுட்டு (ஆனாலும் மக்களுக்கு இது கொஞ்சம் அதிகந்தான்), ஹலோ அது பிரிண்ட் ஆகி வந்து ரூம்ல இருக்குன்னாரு. "தலை"(கிட்டருந்து) தப்பிச்சது நாம பண்ணுன புண்ணியம்னு நினைச்சிக்கிட்டு எஸ்கேப்.